எஸ்.ஐ கொலை: பெண் சாராய வியாபாரி, 2 மகள்கள் கைது, 2 மகன்கள் தலைமறைவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான சாராயம் விற்கும் பெண்ணும், அவரது இரு மகள்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையைச் சேய்த 2 மகன்கள் தலைமறைவாகிவிட்டனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நீலகண்டன் (59), சிஐடி பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த திங்கள்கிழமை காலை கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர் நீலகண்டனை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, மார்பு, தலையில் வெட்டு விழுந் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களது விசாரணையில், நிலத்தகராறில் இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.
நீலகண்டனின் மகன் தேவேந்திரன் சென்னை வில்லிவாக்கம் சிப்காட் காமராஜர் தெருவில் உள்ள இரண்டரை சென்ட் புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வந்தார்.
இந்த நிலம் நீலகண்டனின் அக்காள் மகள் சாலம்மாள் (49) வீட்டுக்கு அருகில் உள்ளது. முன்னாள் சாராய வியாபாரியான சாலம்மாள், அந்த நிலம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வந்தார்.
இதனால் சாலம்மாளுக்கும், நீலகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு போலீசிலும் புகார் செய்யப்பட்டு்ள்ளது.
இந் நிலையில் சாலம்மாள் மற்றும் மகள்கள் கஜலட்சுமி (25), ராதிகா (18) ஆகியோர் தூண்டுதலின் பேரில் சாலம்மாளின் மகன்கள் ரகு, அய்யப்பன் உள்ளிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று நீலகண்டனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாலம்மாள், கஜலட்சுமி, ராதிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள ரகு, அய்யப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.