மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார் மீது திமுகவினர் தாக்குதல்!
திருப்பத்தூர்: மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற, திருப்பத்தூர் வட்டாட்சியர் விஜயராணி மீது திமுகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், கீழச்செவல்பட்டி மணிமுத்தாற்றில் சட்ட விரோதமாக ஆளும் திமுகவைச் சேர்ந்த சிலர் மணல் கடத்தி வருவதாக வட்டாட்சியர் விஜயராணிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விஜயராணி மற்றும் ஊழியர்கள் மணல் கடத்துவோரைப் பிடிக்க முயன்றனர். அப்போது வட்டாட்சியரை, ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுர்கள், தரக்குறைவாக பேசித் தாக்கியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை கோட்டாட்சியர் முன்னிலையிலும் மேலும் தகராறு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, கீழச்செவல்பட்டி போலீசார் திமுக நிர்வாகி நாரயணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள், திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வட்டாச்சியர் விஜயராணி மீது தாத்குதல் நடத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள், வருவாய்த் தணிக்கையை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.