பெட்ரோல்-டீசல் ரூ. 3.50 உயர்கிறது: கேஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரிக்கும்
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயரும் என்று தெரிகிறது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 25 உயர்த்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது மாற்றி அமைக்கலாம் என்றும், இந்த விஷயத்தில் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும், விலையை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கிரீத் பாரிக் கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து வரும் 7ம் தேதி கூடும் மத்திய அமைச்சரவை விவாதித்து முடிவெடுக்கவுள்ளது. அதில் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது (price de-control) குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
ஆனாலும் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை தாறுமாறாக உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலைகள் க்டடுப்பாட்டிலாமல் உயர்ந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்றும் மத்திய அரசு அஞ்சுகிறது.
இந் நிலையில் தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3.50 வரை உயர்த்துவது என்றும், விலைக் கட்டுப்பாட்டை இப்போதைககு நீக்க வேண்டியதில்லை என்றும் மத்திய அரச முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 72 டாலராக சரிந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் விலை 10 டாலர் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை குறையாதிருந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 6.07ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.38ம் உயர்த்த வேண்டியிருந்திருக்கும்.
தற்போது அரசு நிறுவனங்கள் பெட்ரோலை லிட்டருக்கு ரூ. 3.35 நஷ்டத்திலும், டீசலை லிட்டருக்கு ரூ. 3.49 நஷ்டத்தில் விற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் மூலம் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் மூலம் லிட்டருக்கு ரூ. 18.82ம், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரால் ரூ. 261.90ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3.50ம், மண்ணெண்ணெய் விலையை ரூ. 6ம், எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100ம் உயர்த்தலாம் என்றும் கிரித் பாரிக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இதை அமைச்சரவையும் கூட்டணிக் கட்சிகளும் ஏற்காது என்று தெரிகிறது. இதனால் சிலிண்டர் விலையை ரூ. 20 முதல் ரூ. 25 வரை மட்டுமே உயர்த்த பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.