ராஜ்யசபா-மீண்டும் சுதர்சன நாச்சியப்பனை நிறுத்தும் காங்.!
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஒரு இடத்திலும் திமுக 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதிமுக 2 இடங்களில் போட்டியிடுகிறது.
திமுக வேட்பாளர்கள் கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இன்று அதிமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன், கே.வி. ராமலிங்கம்மும் ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
இந் நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சுதர்சன நாச்சியப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற இவர், 2004ம் ஆண்டு தேர்தலில் அந்தத் தொகுதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு விட்டுத் தர முரண்டு பிடிக்காமல் காங்கிரஸ் தலைமைக்கு ஒத்துழைத்தார்.
இதையடுத்து அதே ஆண்டில் அவர் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். இப்போது மூன்றாவது முறையாக எம்பியாகிறார்.
ராஜ்யசபாவுக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடக்கிறது. இனி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாவிட்டால், இப்போது மனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம்.
ராஜ்யசபா ஒரு சீட்டைப் பெற பாமக தரப்பு தொடர்ந்து திமுகவிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.