மேற்கு வங்கம், பஞ்சாபிலிருந்து மின்சாரம் வாங்கும் தமிழகம்
கோவை: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய கோவை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அண்மையில் ஏற்பட்ட லைலா புயல் காரணமாக காற்றாலை மின்சாரம் அதிகளவில் கிடைத்தது. தற்போது அந்த நிலை இல்லாத காரணத்தால் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டது.
இதனால் மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூன் மாதத்துக்குள் மின் வெட்டுப் பிரச்சனை ஓரளவுக்கு தீர்க்கப்படும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வரும் டிசம்பருக்குள் மின்சார உற்பத்தி துவங்குவதற்கான சாத்தியமுள்ளது. இதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் மின்பற்றாக்குறை சீராகும்.
செம்மொழி மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள், வேன், கார் நிறுத்துவதற்காக தாராள இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களால் கோவை நகரில் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாத வகையில் விரிவான போக்குவரத்து முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தும் இடங்களில் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய விருந்தினர்கள், கட்டுரையாளர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஊர்வலத்தைப் பார்வையிட 5லிருந்து 7 இடங்களில் மேடைகள் அமைக்கப்படுகின்றன.
கோவைக்கு 5 நாட்கள் விடுமுறை:
செம்மொழி மாநாடு நடைபெறக் கூடிய 5 நாட்களும் கோவை மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்ரீபதி.
தென் சென்னையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. அறிவிப்பு:
இந் நிலையில் மின்வெட்டை கண்டித்து தென் சென்னையில் 7ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்தியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், காலாவதி மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும்,
தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 7ம் தேதி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications