திமுக மட்டுமே அசல் திராவிட இயக்கம் - மற்றவை போலி: கருணாநிதி
சென்னை: திராவிட என்ற பெயரை மற்றவர்கள் போலியாக பயன்படுத்தி வருகிறார்கள். திமுக மட்டுமே உண்மையான திராவிட இயக்கம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் சேலம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் துணை செயலாளரும், சங்ககிரி கே.ஆர்.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான கே.ஆர்.மோகன், கே.ஆர்.எம்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வை சேர்ந்த சங்ககிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.குமார், சங்ககிரி நகர முன்னாள் செயலாளர் சலாலுதீன், நகர ஜெயலலிதா பேரவைத் தலைவர் அசீம்பாஷா, தே.மு.தி.க.வை சேர்ந்த சங்ககிரி நகர செயலாளர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
நீங்கள் அ.தி.மு.க.விலிருந்தும், தே.மு.தி.க.விலிருந்தும், ம.தி.மு.க.விலிருந்தும் வந்துள்ளீர்கள் என்று எண்ணும்போது, அந்த கட்சிகளில் தி.மு.க. என்ற பெயர் இணைந்திருப்பதை நீங்கள் யாரும் மறந்து விட முடியாது, நானும் மறந்து விடவில்லை.
நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், விலகிச்சென்றவர்கள் எல்லாம் "திராவிட'' என்ற சொல்லை விடாமலே தங்கள் கட்சிக்கு பெயராக வைத்துக்கொண்டிருப்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன், நீங்களும் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
எத்தனை கட்சிகள் பிரிந்தாலும்-கடைசியாக எல்லாமே தி.மு.க.விலிருந்து வந்த கட்சிகள் என்று சொல்கின்ற அளவிற்கு அந்த கட்சிகளின் பெயர்கள் எல்லாம் அமைந்திருப்பதை நாம் யோசிக்க வேண்டும். ஒரு காலத்திலே காங்கிரஸ் கட்சி வலுவான கட்சியாக-பெரிய கட்சியாக -அகில இந்திய கட்சியாக இருந்த அந்த காலத்தில் அவர்களுக்கிடையே வடபுலத்திலே உள்ள காந்தியடிகளுக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் ஏற்பட்ட மோதலால் இரண்டாக காங்கிரஸ் பிரிந்தது, பிறகு மூன்றாகப் பிரிந்தது, நான்காகப் பிரிந்தது, அப்படி பிரிந்த போதெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தங்கள் தலைவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு, அத்துடன் "காங்கிரஸ்'' என்ற பெயரையும் விடாமலே வைத்துக் கொண்டார்கள்.
"இந்திரா காங்கிரஸ்'' என்றும், "மொரார்ஜி தேசாய் காங்கிரஸ்'' என்றும், "காமராஜ் காங்கிரஸ்'' என்றும்-இங்கேயுள்ள காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் கூட, அந்த கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு இயங்கின. ஆனால் இன்றைக்கு அப்படி பிரிந்த காரணத்தால் காங்கிரஸ் அழிந்து விடவில்லை, காங்கிரஸ் அப்படியே இருந்த காரணத்தால் தான், இன்றைக்கு இந்தியாவை ஆளுகின்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருப்பதையும் அதனுடைய தலைவியாக சோனியா காந்தி வீற்றிருப்பதையும் நாம் காண முடிகின்றது.
அதைப்போலத்தான் தி.மு.கழகத்திலிருந்து அ.தி.மு.க.-நான் அண்ணா தி.மு.க. என்று சொல்ல மாட்டேன் - ஏனென்றால் அண்ணா பெயர் அவர்களுக்கு பொருந்தாது-அதுவும் தி.மு.க. என்ற இந்த பெரிய இயக்கத்திலிருந்து தான் பிரிந்தது. அதை பிரியும் போது அவர்களால் "திராவிட'' என்ற சொல்லை விட்டுவிட்டு இயங்க முடியாது என்ற காரணத்தால் "அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்'' என்று அண்ணாவின் பெயரையும் சேர்த்து-இரண்டு பேரையும் சேர்த்தால் தான் தமிழ்நாட்டிலே இருக்கிற பாமர மக்களை ஏமாற்ற முடியுமென்று-இரண்டு பெயரையும் இணைத்து வைத்துக் கொண்டு கொஞ்ச காலம் அவர்களுடைய கட்சியை நடத்திப் பார்த்தார்கள். சிறிது காலம் ஆட்சியை நடத்திப் பார்த்தார்கள்.
இன்றைக்கு முடிவு என்னவென்றால், எல்லாமே சேர்ந்து உருண்டு திரண்டு தி.மு.க. தான் இவர்களுக்கெல்லாம் "நாற்றங்கால்'' - "மூலாதாரம்'' - "தலைமை பீடம்'' என்று சொல்லுகின்ற அளவுக்கு எல்லா கட்சிகளும் ஒன்று திரண்டு வருகின்ற காட்சியைப் பார்க்கின்றோம். அப்படி வருகின்ற காட்சிகளிலே ஒன்று தான் இன்றைக்கு இங்கே நான் காணுகின்ற சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த நீங்கள் தி.மு.க.விற்கு வந்து சேருகிறீர்கள் என்றால் உள்ளபடியே தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று எண்ணியவர்கள், இப்படிப்பட்ட பிளவுகளால் தி.மு.க. நீண்ட நாள் நிற்காது என்றெல்லாம் ஆரூடம் கணித்தவர்கள் ஏமாந்து போகின்ற நிலையைத்தான் இன்றைக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்திலே உள்ள நீங்கள் இன்றைக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
தி.மு.க. ஒன்று தான் "திராவிட'' என்ற சொல்லுக்கு உண்மையான பொருளை உணர்ந்து அந்த உணர்ந்த பொருளை நிலைநாட்டுகின்ற வகையில் இயங்குகின்ற இயக்கம் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. "திராவிட'' என்று வார்த்தை அலங்காரத்திற்காகச் சொல்வதில்லை. நம்முடைய தமிழகத்திலே பெரும் புலவர்கள், விற்பன்னர்கள், பேராசிரியர்கள் எல்லாம் கண்டுபிடித்த உண்மைகளிலே மிக முக்கியமான உண்மை தான் "திராவிட'' என்கின்ற அந்த உணர்வு. நாம் தமிழன் என்று சொல்லிக் கொண்டாலுங்கூட, "திராவிடன்'' என்று சொல்லிக் கொள்ளும்போது தான் - பெரியார் அடிக்கடி சொல்வார் - உன்னை திராவிடன் என்று சொல்லிக் கொண்டால் தான் - திராவிடன் வேறு, ஆரியன் வேறு - என்ற அந்த பாகுபாடு தெரியும், ஆகவே நீ தமிழன் என்றாலுங்கூட, திராவிட இனத்தைச்சேர்ந்தவன் என்பதை மறந்து விடாதே என்று பெரியாரும், அண்ணாவும் நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் தான் "திராவிட முன்னேற்ற கழகம்'' என்ற அந்த இயக்கத்திலிருந்து யார் பிரிந்தாலும், "திராவிட'' என்ற அந்தச் சொல்லை பிரிக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு, மக்களை திசைதிருப்புகிறார்கள். அது மக்களுக்கு தெரிந்திருந்தும் இது உண்மையிலேயே புலி தானா, அல்லது கோடு போட்டுக் கொண்டு வந்திருக்கின்ற பூனையா என்பது மக்களுக்கு நன்றாக தெரியத்தான் போகிறது. ஆகவே தான் உண்மையான திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம், உண்மையான திராவிட இயக்கத்திலே பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் லட்சியங்களை மனதிலே வைத்துக்கொண்டு பாடுபடுகின்ற இயக்கம் உண்மையான திராவிட இயக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாம் போலிகள் - மற்ற இயக்கங்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற பயன்படுகின்ற இயக்கங்கள் - நாம் சிறிது காலம் அதிலே சேர்ந்து ஏமாந்து விட்டோம், இனி விழித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு ஏற்பட்ட அந்த விழிப்புணர்ச்சியின் அடையாளமாகத்தான் இன்றைக்கு இந்த மாமன்றத்திலே இவ்வளவு பேர் குழுமியிருக்கிறீர்கள் என்பதை நான் எண்ணிப்பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த அளவுக்கு பெரும்பான்மையாக தாய்மார்கள் வேறு இயக்கங்களிலிருந்து பிரிந்து வந்து தி.மு.க.விலே தங்களை ஒப்படைத்துக் கொண்டிருப்பதை இப்போது தான் நான் இந்த மண்டபத்திலே முதல் முறையாக பார்க்கிறேன். தாய்மார்கள் விழித்துக் கொண்டாலே, தாயகம் விழித்துக்கொண்டதாக பொருள். தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற உணர்வு - அவர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்திச்செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற அந்த உறுதி - இவைகள் எல்லாம் தொடர்ந்து இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்ற காரணத்தினாலே தான் நான் இங்கே வந்து குழுமியிருக்கின்ற தாய்மார்களையெல்லாம் பாராட்டுகிறேன்.
ஆணும், பெண்ணும் தி.மு.க.வில் குடும்பம் குடும்பமாக நாங்கள் உறுப்பினராக இருக்கிறோம் என்பதை மெய்ப்பிக்கும் வகையிலே இன்றைக்கு மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறீர்கள். இது எதிர்காலத்திலே எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும். எதிர்காலத்திலே எனக்கு நம்பிக்கை என்றால், நான் இன்னும் ஐம்பதாண்டு காலத்திற்கு வாழப்போகிறேன் என்ற நம்பிக்கை இல்லை - இன்னும் தமிழ்நாடு வாழ்வதற்கு வகை இருக்கிறது, தமிழ்நாட்டை வாழவைப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் இன்றைக்கு இந்த இயக்கத்திலே சேருகிறார்கள், இவர்களுடைய கைகளிலே பிடிக்கின்ற கொடி - இவர்களின் கைகளிலே இருக்கின்ற உறுப்பினர் அட்டை இவைகள் எல்லாம் திராவிட இயக்கத்தை, திராவிட உணர்வை, திராவிட இனத்தை கட்டிக்காக்கக் கூடியவை என்ற நம்பிக்கையைத் தான் நான் பெறுகிறேன்.
பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து திராவிட இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களை நான் அறிவேன். ஏனென்றால் எனக்கே கிட்டத்தட்ட இன்னும் இரண்டாண்டுகளில் 90 வயதாக போகிறது. அதனால் இந்த இயக்கத்திலே இளைஞர்களாக இருந்தவர்களை - அவர்களோடு சேர்ந்து வளர்ந்து அவர்களுக்கு பல் போனாலும் எனக்கு பல்லும் போகாமல், சொல்லும் போகாமல் உங்களையெல்லாம் சந்திக்கின்ற வரையிலே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் நான் எண்ணுகிறேன், இந்த இயக்கத்தை காப்பாற்ற அண்ணாவும், பெரியாரும் நம்மிடத்திலே ஒப்படைத்த பணி இன்னும் நிறைவேறவில்லை போலிருக்கிறது, அதை நிறைவேற்றுகின்ற வரையிலே நாம் இருந்து தான் தீர வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணுகின்ற அளவிற்கு இந்த இயக்கம் மேலும் மேலும் பலமாக, வலுவாக வளர்ந்து கொண்டிருக்கின்ற காட்சியை நான் காணுகிறேன். அந்த காட்சிகளில் ஒன்றாகத்தான் இன்றைக்கு தி.மு.க.வில் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த இயக்கத்திற்கு மேலும் மேலும் பலம் கூடிக்கொண்டிருக்கிறது, வலு ஏறிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு கூட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பேசியிருக்கிறார்கள். கூட்டங்களை போடுங்கள், கூட்டத்திற்கு கூட்டம் தி.மு.க.வினுடைய ஊழல்களை எல்லாம் எடுத்துச்சொல்லுங்கள் என்று ஒருவர் பேசியிருக்கிறார். ஊழல் என்றால் உங்களுக்கு என்ன என்று தெரியாது. ஊழல் என்றால், உடல் முழுவதும் ஒட்டியாணத்தையும், நகைகளையும், வளையல்களையும் போட்டுக்கொண்டு நிற்கின்ற அந்த உருவத்திற்குப்பெயர் தான் ஊழல். அந்த ஊழலை ஞாபகத்திலே வைத்துக்கொண்டு ஊர் ஊராக செல்லுங்கள், உங்களில் யாருக்கு பேசத்தெரியுமோ அவர்கள் எல்லாம் திராவிடத்தைப்பற்றி பேசுங்கள் - யாருக்கு எழுதத் தெரியுமோ அவர்கள் எல்லாம் திராவிடத்தைப் பற்றி எழுதுங்கள் - திராவிட இன உணர்வு கொள்ளுகின்ற வகையிலே பிரசாரம் செய்யுங்கள் என்றார்.
-
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications