அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை - டெல்லி அரசிடமே உள்ளது!

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்சல் குருவின் கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவே இல்லை. எங்களது ஆவணங்களின்படி, அது தற்சமயம், டெல்லி அரசிடமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 49 மரண தண்டனைக் கைதிகளிடமிருந்து 27 கருணை மனுக்கள் இதுவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு வந்து, அவரது பரிசீலனைக்காக காத்துள்ளன.
இதில் அப்சல் குரு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பந்து திடாக் ஆகியோரின் கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இவைதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்துறை அமைச்சகம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளது.
அப்சல் குருவுக்கு 2002ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் 2003ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்திலும், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் குருவின் குடும்பத்தினர் அப்சல்குரு சார்பில் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினர்.
சட்டமுறைப்படி, அதை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, டெல்லி அரசின் கருத்தைக்கேட்டு பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி மேலும் கூறுகையில், வெறும் மனுவை வைத்துக் கொண்டு குடியரசுத் தலைவர் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க மாட்டார். மனு கிடைத்தவுடன், அது உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
உள்துறை அமைச்சகம்,சம்பந்தப்பட்ட மாநில அரசின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கு்ம். அதன் பிறகுதான் குடியரசுத் தலைவர் கருணை மனு மீது முடிவெடுப்பார்.
ஒரு கருணை மனு மீது உள்துறை அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருந்தால், அந்தமனு மீது குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.
தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 25 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை வரிசைக்கிரமப்படிதான் குடியரசுத் தலைவர் பரிசீலிக்க முடியும். இவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்க குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குடியரசுத் தலைவருக்கு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு வழி இல்லை. மேலும், கருணை மனு மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவரை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது என்றார்.
தற்போதைய நிலவரப்படி அப்சல் குரு விவகாரத்தில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் குழப்பமாகவே உள்ளது












Click it and Unblock the Notifications