பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு நாளை இறுதி முடிவு எடுக்கிறது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட பரேக் கமிட்டி, பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்த வேண்டும். அதேபோல், கெரசின் விலையையும் உயர்த்த வேண்டும். எரிபொருள் மானியத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு நாளை கூடுகிறது.
இக்கூட்டத்தில் முகர்ஜி, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, விவசாய அமைச்சர் சரத்பவார், உரத்துறை அமைச்சர் அழகிரி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் விலை உயர்வு குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல டீசல் விலையும், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்த்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications