ஐஃபா விழா... ராஜபக்சேவும் 'புறக்கணித்தார்'!!

தமிழ் உணர்வாளர்கள் மற்றும் திரையுலகினரின் கடும் எதிர்ப்பால் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் கலையிழந்து மாபெரும் தோல்வியைத் தழுவிய ஐஃபா விழாவின் இறுதி நாளில் ராஜபக்சே கலந்து கொள்ளவில்லை. தனக்கு பதில் தனது மனைவி ஷிராந்தியையும் மகன் நாமல் ராஜபக்சேயையும் மட்டும் அனுப்பி வைத்திருந்தார் ராஜபக்சே.
இந்த இறுதி நிகழ்ச்சியில், விருது வென்ற அனைத்து நட்சத்திரங்களுக்கும் ராஜபக்சே தன் கையால் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விருது பெற வேண்டிய நட்சத்திரங்களில் 90 சதவிகிதத்தினர் விழாவைப் புறக்கணித்து கடைசி வரை வராமலே இருந்துவிட்டனர். அமிதாப், ஷாரூக்கை வரவழைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தார் ராஜபக்சே. இந்திய மத்திய அரசின் துணையையும் அவர் நாடத் தயங்கவில்லை. ஆனால் இந்த அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழர்களின் உணர்வையும் கோபத்தையும் புரிந்து கொண்டு அமைதியாகப் பின்வாங்கிவிட்டனர் இந்தி நட்சத்திரங்கள்.
இதையெல்லாம் விட முக்கியமானது, காதலருடன் கொழும்பு சென்ற தமிழ் நடிகை ஜெனிலியா, பிரச்சினையின் தீவிரம் கருதி அடித்துப் பிடித்துக் கொண்டு மும்பை திரும்பிவிட்டார். பின்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு விஷயத்தையும் கூறியுள்ளார். அவரை காய்ச்சி எடுத்த திரையுலக அமைப்புகள், அதன் பிறகே தடையை அறிவித்தனர். ஜெனிலியாவின் இந்த ஓட்டத்தையும் ஆட்டத்தையும் பார்த்து ஐஃபா அமைப்பாளர்களும், இந்த விழாவின் இலங்கை ஏற்பாட்டாளர்களும் திகைத்துப் போனார்களாம்.
இதனால் வெறுத்துப் போய் விட்டாராம் ராஜபக்சே. இந்தப் பின்னணியில்தான் சுவாரஸ்யமே இல்லாத ஐஃபா விழாவை ராஜபக்சேவும் 'புறக்கணித்துள்ளார்'.
பாலிவுட் நட்சத்திரங்களின் புறக்கணிப்பை விட, ராஜபக்சேயின் இந்த கடைசி நேர புறக்கணிப்புதான் பெரும் விமர்சனத்தையும் நையாண்டியையும் கிளப்பிவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ராஜபக்சே அரசை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளன. நட்சத்திரங்கள் இல்லாமல் உபரி நடிகர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஐஃபா விழாவுக்கு 1 பில்லியன் ரூபாய் செலவழித்தது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இன்னொன்று, ஐஃபா விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், இந்திய முதலீட்டாளர்களுடனான சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்தன. இந்த விழாவில் பங்கேற்கவிருந்த ராஜபக்சே மனைவி ஷிராந்தி 2 மணி நேரம் தாமதமாக வந்தாராம். இது இந்திய வர்த்தகப் புள்ளிகளை கடுப்புக்குள்ளாக்கியதாம்.












Click it and Unblock the Notifications