தென்காசி அருகே 400 ஏக்கர் நில மோசடி-முக்கிய புள்ளி கைது
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சுரண்டை, ஊத்துமலை பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் நிலங்களை விவசாயம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கி போட்டு விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.
மேற்படி நிலங்களை பாதுகாத்திட கொல்லம் அஞ்சல் ஏரூர் பகுதியை சேர்ந்த ஒரு நபரை மேலாளராகவும் நியமித்து அவருக்கு மாத ஊதியமும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நிலத்தை வாங்கி போட்டு விட்டு அமெரிக்கா சென்ற நில உரிமையாளர் சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூர் வந்தவர் தனது நிலத்தை பார்க்க ஊத்துமலை வந்துள்ளார்.
அப்போது தனது நிலத்தில் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து தனது மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார்.
புகாரை தொடர்ந்து நெல்லை சிறப்பு பிரிவு மற்றும் குற்ற பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை துவங்கினர். பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு நகலை எடுத்து பார்த்ததில் சுமார் 150 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும் அச்சன்கோவிலை சேர்ந்த இந்திய கம்யூ பிரமுகர் உள்பட 42 பேரும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மறற நபர்கள் பேரிலும் சுமார் 50 சென்ட் முதல் 5 ஏக்கர் வரை நிலம் போலியாக தயாரிக்கப்பட்ட பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வரவே இதில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் சுமார் 11 பேரை இது வரை கைது செய்து தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பலர் சில ஆயிரம் ரூபாய்க்காக தங்களது புகைப்படம், ரேசன் கார்டு, முகவரியை கொடுத்து கையெழுத்து போட்ட அப்பாவிகளும் அடங்குவர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற மோசடி நிலங்களை புரோக்கர்கள் மூலம் ஏமாந்து வாங்கிய காற்றாலை நிறுவனங்கள் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளன.













Click it and Unblock the Notifications