போபால் விஷ வாயு வழக்கு தீர்ப்பு - பாதிக்கப்பட்டோர் அதிருப்தி - அப்பீல் செய்ய முடிவு
போபால் விஷவாயு சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் கூட அப்பகுதி மக்கள் மீளவில்லை. பல்வேறு நிரந்தர ஊனங்களுடன் நடை பிணமாக பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்று போபால் கோர்ட் அளித்த தீர்ப்பு பெரும் விரக்தியையும், அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோர்ட்டில் திரண்டிருந்த அவர்களும், பிற பொதுமக்களும், தீர்ப்பைக்கேட்டு ஆவேசமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,தற்போதைய தீர்ப்பின்படி பார்த்தால் வெறும் 2 ஆண்டுகள்தான் தண்டனை கிடைக்கும். இது போதாது. அதிகபட்ச தண்டனையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஆண்டர்சனையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த வழக்கில் 178 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அரசுத் தரப்பில் இருந்து 8 சாட்சிகள் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை கடந்த 6-ந் தேதி அன்று முடிவடைந்தது.