தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை - நெடுமாறன்
சென்னை: தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு சற்றும் மதிக்கவில்லை. அதன் வெளிப்பாடே ராஜபக்சேவுக்கு மத்திய அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு தருவது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து நேற்று நடந்த போராட்டத்தின்போது நெடுமாறன் பேசுகையில், ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளிப்பதோடு, அந் நாட்டுடன் சில உடன்பாடுகளையும் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே இலங்கைக்கு சென்று வந்த எம்பிக்கள் குழு எதையும் சாதிக்கவில்லை. இந்தக் குழுவினர் ராஜபக்சேவுக்கு சாதகமாக அறிக்கை வெளியிட்டனர்.
இப்போது மற்றொரு குழுவை முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அந்தக் குழுவாலும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எனவே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தொடரும் என்றார் அவர்.