'அம்மாவுக்கு கடிதம்': புத்தகமான முத்துசாமியின் கடிதங்கள்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னும், பின்னும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் அமைச்சர் முத்துசாமி இரு கடிதங்கள் எழுதினார். இந்த இரு கடிதங்களும், 'அம்மாவுக்கு கடிதம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
24 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தின் முன், பின் அட்டைகளில் எம்.ஜி.ஆர். படம் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள்:
அதிமுகவில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டதில் இருந்து முதல் இரண்டு ஆண்டுகள் தங்கள் நிகழ்ச்சிகளை ஈரோட்டில் சிறப்பாக நடத்தினேன் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
கொடுமுடியில் தங்களை வைத்து நடத்திய பொதுக்கூட்டத்தில் அன்றைய மாவட்டச் செயலர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்கு நினைவிருக்கும். அதன் பின், சிலர் என் மீது சொன்ன பொய்யான தகவலால், தாங்கள் என்னை தவறாக கருதினீர்கள்.
எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நீங்கள் என்னை பாராட்டி பேசியவுடன், மேடையில் இருந்த செங்கோட்டையன் கீழே இறங்கிச் சென்று விட்டார்.
அவரை நான் திட்டியதாக ஒரு அப்பட்டமான பொய்யை தங்களிடம் சொல்லி விட்டனர். அடுத்த நாள் அவரை பாராட்டி மிகப்பெரிய அறிக்கை கொடுத்தீர்கள்.
கழகத்தில் என்னோடு நட்பாக இருந்த உடன் பிறப்புகள், கட்சி இணைக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எந்த தீர்வும் என்னால் ஏற்படுத்த முடியவில்லை.
15 ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்கள் மூலம், என்னை நம்பிய சில பேருக்கு சிறிய அளவில் கூட உதவி செய்து காப்பாற்ற முடியாது என்பது உறுதியானதால் தான் நான் விலக முடிவு செய்கிறேன்...
இவ்வாறு அதில் மேலும் பல விவரங்களையும் நினைவூட்டியுள்ளார முத்துசாமி.












Click it and Unblock the Notifications