கொத்தமல்லிக்கு ஏக கிராக்கி... காய்கறி விலை தாறுமாறாக உயர்வு!
பெரும்பாலான கடைகளில் பீன்ஸ் கிலோ ரூ.45க்கும், கேரட் ரூ.38க்கும் விற்கப்படுகிறது. தக்காளி விலை ரூ 32 முதல் 38 வரை விற்கப்படுகிறது.
சமீப காலமாக மீன் (வஞ்சிரம், வவ்வா, கொடுவா) விலை கிலோ ரூ 450 க்கும் மேல் அதிகரித்ததால் நிறைய பேர் காய்கறி வாங்கத்தொடங்கினர். இப்போது காய்கறி விலையும் அதிகரித்து விட்டதால், கீரைகள் போன்றவற்றை வாங்க ஆரம்பித்துள்ளனனர்.
பீன்ஸ், கேரட், சவ்சவ், சேனை, அவரை, பாகற்காய் என எந்த காய்கறியானலும் ரூ.40க்கு மேல் தான் விற்கப்படுகிறது. முருங்கைக்காய் 100 கிராம் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. முருங்கை கீரை கூட கட்டு ரூ 8 வரை விற்கிறார்கள்.
பொதுவாக காய்கறி வாங்கினால் இலவசமாகத் தரப்படும் கொத்தமல்லி, இப்போது எந்தக் காய்கறிக் கடையிலும் கிடைப்பதில்லை. கட்டு ரூ 40க்கும மேல் விற்பதால் அதை வாங்குவதில்லை என கடைக்காரர்கள் கூறுகிறார்கள். சில கடைகளில் கல்லாவுக்குப் பக்கத்தில் மறைத்து வைத்து விற்கிறார்கள். ரூ 5 கொடுத்தால் இரண்டு அல்ல மூன்று தழைகள் மட்டுமே தருமளவுக்கு அரிதான பொருளாகிவிட்டது கொத்தமல்லி.
கடும் வெயில் மற்றும் வறட்சியால் வட மாவட்டங்களில் கொத்தமல்லி விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டதாலேயே இந்த நிலை என்று கூறப்படுகிறது.
இதே காரணங்களால்தான் காய்கறி விலையும் உயர்ந்துவிட்டதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.