ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே:சிஐடி போலீஸ்
பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கையில் இருக்கும் காட்சிகளைக் கொண்ட சி.டி. உண்மையானதுதான் என்று, கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் துணை ஐ.ஜி. சரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூர் அருகே பிடுதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாயினர்.
இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இமாசலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இன்று அவருக்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது.
ஆனால், ரஞ்சிதா தான் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந் நிலையில், கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சரண் ரெட்டி பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி., ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆய்வில், அந்த சி.டி. உண்மையானதுதான் என்றும், திருத்தப்பட்ட சி.டி. அல்ல என்றும் உறுதியாகியுள்ளது. போலி சிடி அல்ல என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இதுபற்றி ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். ஆனால் அவர் இன்னும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அவர் குற்றவாளி அல்ல. இருப்பினும் அவர் போலீஸார் முன்வந்து வாக்குமூலம் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.