ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 37 சதவீத பங்குகளை வாங்கும் கலாநிதி மாறன்!

இது தொடர்பான ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
நாட்டில் இயங்கும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் முக்கியமானது ஸ்பைஸ்ஜெட். மொத்தம் 129 விமானங்களை 18 நகரங்களிடையே இயக்குகிறது. இந்நிறுவனம் வசம் 19 போயிங் விமானங்கள் உள்ளன. நாட்டின் விமான சந்தையில் இந்நிறுவனத்துக்கு 13 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் பெரும்பான்மைப் பங்குகளை பூபேந்திர கஸங்கரா மற்றும் வில்புர் ரோஸ் ஆகியோர் வைத்துள்ளனர்.
இப்போது, வெளிநாடுகளுக்கு விமான சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது ஸ்பைஸ்ஜெட். முதல் கட்டமாக அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இம்மாத இறுதிக்குள் விமானங்களை இயக்க உள்ளது.
பங்கு விற்பனை தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரிகளோ சன் குழும அதிகாரிகளோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனாலும் ஒரு பங்கு ரூ. 45 என்ற விலையில் சுமார் 15 கோடி பங்குகளை கலாநிதி மாறன் வாங்க உள்ளார் என்றும், இதற்காக அவர் செலவிடும் தொகை ரூ. 700 கோடியாக இருக்கும் என்றும் சந்தையில் பரவலாக பேசத் துவங்கியுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஈர்த்து வருகிறது. இந்நிறுவனத்தில் 6 சதவீத பங்குகளை டாடா நிறுவனம் 2006-ல் வாங்கியுள்ளது. முதலீட்டாளர் வில்பர் ரோஸ் 2008-ம் ஆண்டு ரூ. 345 கோடி முதலீடு செய்துள்ளார். அதே ஆண்டு கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் ரூ. 90 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்துக்கு மேற்கொண்டு முதலீடு தேவையில்லை என்றாலும், பலரிடம் பங்குகள் பரவலாக இருப்பதை விட ஒருவரிடம் அதிகபட்ச பங்குகள் இருப்பது நிறுவனத்துக்கு நல்லது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கலாநிதி மாறன் இந்நிறுவன பங்குகளை வாங்குவது நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு உதவும் என கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications