ஆன்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவ் காந்திக்கு தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

Rajiv Gandhi and Arjun Singh
டெல்லி: யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை தப்பவிட்டதில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு தொடர்பிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர் பிரதராக இருந்தபோது தான் ஆண்டர்சன் தனி விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்டு அமெரிக்காவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

விஷவாவு கசிவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தனது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்த ஆண்டர்சனை மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் தனது அரசு விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

இதனால் ராஜிவ் காந்தியின் உத்தரவின்பேரில்தான் அர்ஜூன் சிங் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இதை அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் ஆவணங்களும் உறுதிப்படுகின்றன. கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் உள்ள சிஐஏ மையம் எழுதுய இந்த ரகசிய குறிப்புகளை கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் சிஐஏ பகிரங்கமாக்கியது.

1984ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி எழுதப்பட்ட அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''நேற்று யூனியன் கார்பைட் தலைவர் ஆண்டர்சனை இந்திய மத்திய அரசு வேகமாக விடுதலை செய்தது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியப் பிரதேச அரசு முயல்வதாக, இந்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.

இந்த விஷவாயு கசிவுக்கு ஆண்டர்சனையோ யூனியன் கார்பைட் நிறுவனத்தையோ நேரடியாக குற்றம் சாட்டுவது சரியல்ல என்று அமெரிக்க உளவுப் பிரிவு கருதுகிறது. அதன் இந்திய துணை நிறுவனத்தின் (Union Carbide India Ltd) மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், துணை நிறுவனத்தை காப்பாற்றிவிட்டு அமெரிக்க நிறுவனம் மீது குற்றம் சுமத்த முயற்சிகள் நடக்கின்றன'' என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராஜிவ் காந்தியின் உத்தரவால் தான் ஆண்டர்சனை அர்ஜூன் சிங் விடுவித்தார் என்பது தெளிவாகிறது. அவரைப் பொறுத்தவரை ஆண்டர்சன் மீதும் அமெரிக்க நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தது தெரிகிறது. ஆனால், டெல்லியில் இருந்து வந்த உத்தரவுகளால் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் ராஜிவ் காந்திக்கு எந்தவகையான அமெரிக்க நெருக்குதல் வந்தது, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த அமெரிக்க அதிகாரிகள், அமைச்சர்கள், தூதர்கள் பேசினார்கள் என்ற விவரம் அந்த ரகசிய குறிப்புகள் இடம் பெறவி்ல்லை.

ராஜிவ் விடுவித்திருக்கலாம்.. பி.சி.அலெக்சாண்டர்:

இந் நிலையில் ராஜிவ் காந்தியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய தமிழக முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்சாண்டர் சென்னையிலிருந்து நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த 3வது நாள் டெல்லியில் அதிகாலையிலேயே பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையில் மூத்த அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். அதில் மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங்கும் கலந்து கொண்டார்.

ஆனால், அப்போது யூனியன் கார்பைட் தலைவர் ஆண்டர்சனை விடுவிப்பது குறித்து பேசப்படவில்லை.

ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல அனுமதி அளிக்கலாம் என்று ராஜிவ் காந்தி முடிவெடுத்தாரா? அர்ஜூன் சிங் முடிவெடுத்தாரா? என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கிருந்தவரை அது குறித்து விவாதிக்கப்படவிவ்லை.

நான் அந்தக் கூட்டம் முடிந்தவுடன் ராஜிவுடன் வேறு பல முக்கிய நாட்டு விஷயங்கள் குறித்து 20 நிமிடம் பேசிவிட்டு்க் கிளம்பிவிட்டேன். அதன் பிறகு ராஜிவும் அர்ஜூன் சிங்கும் தனியே சந்தித்துப் பேசினர். அப்போது ஆண்டர்சனை தப்ப வைப்பது குறித்து இருவரும் பேசினார்களா என்பது எனக்குத் தெரியாது. இது குறித்து விளக்கம் தர வேண்டியது அர்ஜூன் சிங் தான்.

எதாவது நெருக்கடி அல்லது சர்வதேச உறவுகள் தொடர்பாக நாட்டின் நலன் கருதி அந்த நடவடிக்கை (ஆண்டர்சனை விடுவித்தது) எடுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட முயன்றார் அலெகஸாண்டர் என்பதும், அதை சோனியா ஆதரிக்காததால் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார் அலெக்ஸாண்டர் என்பதும் நினைவுகூறத்தக்கது.

ஆர்.கே.தவான்:

இந் நிலையில் ராஜிவ் காந்தியின் தனிச் செயலாளர் இருந்த ஆர்.கே.தவான் கூறுகையில், ஆண்டர்சன் தப்பிச் சென்றது குறித்து அர்ஜூன் சிங்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆண்டர்சனை அனுப்ப அர்ஜூன் சிங் அரசு விமானத்தை கொடுத்தது ராஜிவ் காந்திக்கு தெரியும் அல்லது ராஜிவ் காந்தி சொன்னதன் பேரில்தான் அர்ஜூன் சிங் அரசு விமானத்தை அனுப்பினார் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் அர்ஜூன் சிங் தான் விளக்கம் தர வேண்டும் என்றார்.

சோனியாவை சந்தித்த அர்ஜூன் சிங் மறுப்பு:

இந் நிலையில் நேற்று முன் தினம் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த அர்ஜூன் சிங், ஆண்டர்சன் விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்த நேரத்தில் விஷவாயு பிரச்சனையை நான் மிகச் சிறப்பாக கையாண்டேன் என்றும் கூறினார்.

காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு:

இந் நிலையில், ஆண்டர்சன் தப்பிச் சென்றதில் அப்போதைய மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இது தொடர்பாக செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசுக்கு இதில் தொடர்பிருப்பதாக சொல்வதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் ராஜிவ் காந்தி அரசை குற்றம்சாட்டுவது என்ற கேள்வியே எழவில்லை. 26 ஆண்டுகள் கழித்து பலரும் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள். எது உண்மை என்பதை அமைச்சர்கள் குழு கண்டுபிடிக்கும்.

அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில்தான் ஆண்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கருத்து தெரிவித்து உள்ளாரே? என்று கேட்டதற்கு,

ராஜிவ் காந்தி அரசுக்கு நெருக்கடி, தூண்டுதல் இருந்தது என்பதில் உண்மை இல்லை. அதுபற்றி திக் விஜய் சிங்கே விளக்கம் அளித்து விட்டார். யாருடைய தூண்டுதலும் இருந்தது என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையை பின்னர் எடுத்துக் கொண்ட டோவ்' நிறுவனத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி இடம் பெற்றுள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் என்ற முறையில் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

டிசம்பர் 3ம் தேதி விஷவாயு சம்பவம் நடந்தது. இதையடுத்து 7ம் தேதி ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அதே நாளில் விடுவிக்கப்பட்டு சிறப்பு விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிபபிடத்தக்கது.

ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க யுஎஸ் தயார்?:

இந் நிலையில் போபால் விஷவாயு விபத்து வழக்கு தொடர்பாக, இந்தியாவிடம் இருந்து புதிதாக கோரிக்கை வந்தால், வாரன் ஆண்டர்சனை ஒப்படைப்பது பற்றி பரிசீலிப்போம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+