சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனை தளர்வு-பார்வதி அம்மாள் நிராகரிப்பு

தனிப்பட்ட காரணங்களுக்காக அதைப் பரிசீலிக்கக் கூட பார்வதி அம்மாள் தயாராக இல்லை என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் சிவாஜிலிங்கம் அளித்த பேட்டியில், மலேசியாவிலிருந்து ஸ்டிரெச்சரில் படுத்த படுக்கையாக நீண்ட தூரம் பயணித்து, சென்னைக்கு வந்து, அங்கு விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்கப்படாமல் இந்திய அரசு திருப்பி அனுப்பிய அவமானத்தை இன்னும் பார்வதி அம்மாள் மறக்கவில்லை.
எனவே தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று கூறியுள்ள இந்திய அரசின் தற்போதையை அறிவிப்பை ஏற்கவோ, பரிசீலிக்கவோ அவர் தயாராக இல்லை. அந்த மன நிலை அவரிடம் போய் விட்டது.
நடமாட முடியாத, படுத்த படுக்கையாக உள்ள ஒரு வயதான பெண்ணுக்கு இந்தியாவில் மரியாதை கிடைக்கும், சிகிச்சைக்கு வழி கிடைக்கும் என்ற பார்வதி அம்மாளின் நம்பிக்கை அன்றே தகர்ந்து போய் விட்டது. அவரது மனதை நாடு கடத்தல் சம்பவம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது, புண்படுத்தி விட்டது என்றார் சிவாஜி லிங்கம்.
கடந்த ஏப்ரல் 16ம் தேதி சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வந்த பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து கூட இறங்க அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பி விட்டது இந்திய அரசு. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழக அரசும், இந்திய அரசும் இந்த செயலுக்காக கடும் கண்டனங்களை சந்தித்தன. இதையடுத்து பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, அரசு கூறும் மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். யாரையும்சந்திக்கக் கூடாது. சிகிச்சை முடிந்தவுடன் திரும்பிப் போய் விட வேண்டும் என்று பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாளுக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால் அதை அவர் ஏற்கவில்லை, நிராகரித்து விட்டார். இந்த நிலையில் தற்போது நிபந்தனைகளை தளர்த்தியது மத்திய அரசு. அதையும் பார்வதி அம்மாள் பரிசீலிக்க மாட்டார் என்று சிவாஜிலிங்கம் தற்போது தெரிவித்துள்ளார்.
தற்போது பார்வதி அம்மாள் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு சிவாஜிலிங்கம் பதிலளிக்கையில், அவர் முழுமையாக குணமாகவில்லை. ஆனால் நபர்களை அவர் அடையாளம் கண்டு கொள்கிறார். அவருடைய கனடா மகள் தொடர்ந்து தொலைபேசி மூலம் தனது தாயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications