பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்
முகையூர் பாமக எம்.எல்.ஏ. கலிவரதன் மகள் திருமண விழாவில் ராமதாஸ் பேசுகையில்,
பெரியாரின் புரட்சியால் நீதிக்கட்சி உருவான காலத்தில் வகுப்புவாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பின்பு, காமராஜரும், பெரியாரும் சேர்ந்து அடிதட்டில் வாழும் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர். பெரியாரின் இத்தகைய போராட்டத்தால் எல்லா சமுதாயத்தினருக்கும் இன்றைக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், இது போதாது.
இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள்.
பாமக கொள்கை மாதிரி வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கைகள் இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பாமகவையே கலைத்து விடவும் தயாராக உள்ளேன்.
சமூக நீதிக்காகவும், சமூக-பொருளாதார மாற்றங்களுக்காகவும், அரசியல், பண்பாடு ஆகியவற்றுக்காகவும் உரக்க குரலெழுப்புவதற்கு பாமகவைவிட சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை என்றார்.