ஆயிரக்கணக்கானோரைக் காப்பாற்றியதற்கு ரூ. 5000 பரிசுதானா? ரயில்வே ஊழியர்கள் அதிருப்தி
சென்னை: விழுப்புரம் அருகே ரயில் பாதையில் குண்டு வெடித்த தகவலை உடனடியாக உரியவர்களுக்குத் தெரிவித்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காத்த தங்களுக்கு வெறும் ரூ. 5000 மட்டுமே பரிசாக அளிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜூன் 12ம் தேதி அதிகாலையில் விழுப்புரம் அருகே பேரணி ரயில்நிலையப் பகுதியில் தண்டவாளத்தை சிலர் குண்டு வைத்துத் தகர்த்தனர். அந்த சமயத்தில், சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தது.
குண்டு வெடித்ததைப் பார்த்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின்கார்டு, உடனடியாக பேரணி ரயில் நிலையத்தை உஷார்படுத்தினார். இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அந்த சமயத்தில், சம்பவ இடத்தை மலைக்கோட்டை ரயில் நெருங்கியிருந்தது. இருப்பினும் என்ஜின் டிரைவர் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி விட்டார்.
ரயில்வே ஊழியர்களின் சாதுரியம் காரணமாக ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ. 5000 பரிசு அளிக்கப்படும் என ரயிலவே பொது மேலாளர் கிருஷன் அறிவித்திருந்தார்.
அதன்படி, சேலம் எக்ஸ்பிரஸின் கார்டு ராஜசேகரன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் கோபிநாத் ராவ், துணை டிரைவர் ராஜ்குமார், முண்டியம்பாக்கம் ஸ்டேஷன் மாஸ்டர் துக்காராம், பேரணி துணை ஸ்டேஷன் மாஸ்டர் மண்டி, சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தட கட்டுப்பாட்டாளர் தயாநிதி ஆகியோருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் ஆளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
ஆனால் இது ரயில்வே ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊழியர்களில் சிலர் கூறுகையில், ஆயிரக்கணக்கானோரின் உயிரை ரயில்வே ஊழியர்கள் காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு ரூ. 5000 மட்டுமே தரப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. இது வழக்கமான பரிசுத் தொகையாக இல்லாமல் சற்று அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications