மீண்டும் பாஜகவில் ஜஸ்வந்த் சிங்-உமா பாரதி!

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடைந்ததையடுத்து தேர்தல் வியூகம், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்ட அத்வானி- அருண் ஜேட்லி- சுஷ்மா சுவராஜ் ஆகியோரை ஜஸ்வந்த் சிங் கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து முகம்மத் அலி ஜின்னாவைப் பாராட்டும் வகையில் ஒரு நூலை வெளியிட்டதை காரணம் காட்டி ஜஸ்வந்த் சிங்கை கட்சியை விட்டு நீ்க்கினர் மூத்த தலைவர்கள்.
இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்த ஜஸ்வந்த் சிங், தொடர்ந்து அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக செயல்பட்ட கு க்ளுக்ஸ் கிளான்' ரகசிய, இனவெறி- தீவிரவாதக் கும்பல் போல பாஜக மாறிவிட்டதாக கடுமையாகத் தாக்கினார். மேலும் நான் ராணுவத்தில் பணியாற்றிய தேசப் பற்றாளன், ஆனால் ஆர்எஸ்எஸ்காரன் இல்லை, அதனால் நீக்கப்பட்டிருக்கலாம் என்றார்.
இந் நிலையில் இழந்த செல்வாக்கை மீட்க, முதலில் கட்சியை விட்டு விலகிய, நீக்கப்பட்ட முக்கியத் தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்கும் வேலைகளை பாஜக ஆரம்பித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக உமா பாரதி மற்றும் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் சேர்க்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் பாஜக தலைவரான நிதின் கட்காரி.
பாட்னாவில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்துக்கு முன், நிதின் கட்கரியை ஜஸ்வந்த் சிங் சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில், ஜஸ்வந்த் சிங் அடுத்த சில தினங்களில் மீண்டும் பாஜகவில் சேருவார் என்று தெரிகிறது. உமா பாரதியை சேர்க்க மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் செளஹான் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அவரை சமாதானப்படுத்திய பின் அவரையும் கட்சியில் சேர்க்க முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன.
இந் நிலையில் இன்று அத்வானியுடன், உமா பாரதி ராய்ப்பூர் சென்றுள்ளார். அங்கு உமா பாரதி மீண்டும் கட்சியில் இணையவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications