மாயமானதாக கூறப்பட்ட 1445 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
திருச்சி: காணாமல் போனதாக கூறப்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளி மாணவ, மாணவிகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை, சென்னையிலிருந்தே அனுப்பி வைக்காதது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்ட அந்த சான்றிதழ்கள் இன்று காலை மாணவ, மாணவியரிடம் வழங்கப்பட்டன.
நேற்று பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இந்தநிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிக்கூடங்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர் வீடுகளுக்கு தகவல் அனுப்பினர். இதைத்தொடர்ந்து பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து விட்டனர். மதிப்பெண் சான்றிதழ் என்ன ஆனது என்று பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை.
அதேசமயம், இந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு சான்றிதழ் குறித்து கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.சுவாமிநாதன் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ் அடங்கிய கட்டு மட்டும் எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து தேர்வுகள் துறை இயக்குநரகத்திடம் தகவல் தந்துள்ளோம். விசாரணை [^] நடந்து வருகிறது என்றார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சென்னையிலிருந்தே இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படாதது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இரவு அவை அனைத்தும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலை மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications