வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை

தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 6 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோவை மற்றும் புதுக்கோட்டையிலும் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்,ஆனந்தராஜ் என்ற வக்கீல் தலைமையில் 9 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 15 வக்கீல்கள் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதேபோல புதுக்கோட்டையில், வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் இயக்கம், தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், தமிழன உணர்வாளர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரம் துவங்கி உள்ளனர்.
நாளை முதல் திருச்சி மற்றும் மதுரை சட்டக் கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.
மதுரையில் ரயில் மறியல்
இந்த நிலையில், மதுரையில் 32 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
18ம் தேதி கோர்ட் புறக்கணிப்பு
இந்த நிலையில் வருகிற 18ம்தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
வக்கீல்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் இன்று மதுரை கிளை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, முருகேசன் ஆகியோரோடு வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications