போபால் விஷவாயு நிவாரணம்: அழகிரி 60 பக்க அறிக்கை தாக்கல்
டெல்லி: போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது தொடர்பாக மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி, 60 பக்க ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
போபால் விஷவாயு கசிவு விபத்து, அது தொடர்பான வெளிவந்துள்ள தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் ஆகியவை குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் புதிய மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மு.க. அழகிரியும் இடம் பெற்றுள்ளார்.
26 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயு விபத்து தொடர்பாக அண்மையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைட் ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை.
மேலும் அவரை அப்போதைய மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசும், மத்திய அரசும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பி வைத்தன.
இந்நிலையில் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு, நிவாரண உதவியைப் பெற்றுத் தருவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள மு.க. அழகிரி, தனது துறை மூலமாக தனி விசாரணை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக 60 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை அமைச்சர்கள் குழுவிடம் அளித்துள்ளார். இந்த அறிக்கையை மத்திய அமைச்சர்கள் குழு பரிசீலித்து மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை அளிக்கும் என்று தெரிகிறது.
நாளை முதலாவது ஆய்வு கூட்டம்:
இந் நிலையில் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் முதலாவது கூட்டம் நாளை நடக்கிறது. இதில் சிபிஐ அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
சிபிஐ அதிகாரிகளிடம், போபால் வழக்கில் மொத்தம் உள்ள 340 சாட்சிகளில், 178 பேரை மட்டும் விசாரித்தது ஏன் என்று அமைச்சர்கள் குழுவினர் கேள்வி எழுப்ப உள்ளனர். எஞ்சியவர்களை விசாரிக்காமல், விடுவித்ததற்கான காரணம் குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளனர்.
ஆண்டர்சன் தப்பிய விவகாரம், அப்போதை சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளதா என்றும் கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெள கெமிக்கல்ஸ் அதிகாரியை சந்திக்க மாட்டேன்-பிரணாப்:
இந் நிலையில் தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது டெள கெமிக்கல்ஸ் அதிகாரியை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
போபால் விஷ வாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு ஆலையை தற்போது மற்றொரு அமெரிக்க நிறுவனமான டெள கெமிக்கல்ஸ் தான் வாங்கியுள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் பிரணாப் முகர்ஜி, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது டெள கெமிக்கல்ஸ் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூ லிவ்ரி அவரை சந்தித்துப் பேசுவார் என செய்தி வெளியானது.
இதை பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.