தியாகியை அவமதிப்பதா?-இந்து முன்னணிக்கு கைவினைஞர்கள் கண்டனம்
கரூர்: சுதந்திர போராட்ட தியாகி முத்துச்சாமி ஆசாரியாரை அவமதித்த இந்து முன்னணிக்கு அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூரில் வரும் ஜூன் 20-ம் தேதி இந்து முன்னணி சார்பில் இந்து சம உரிமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் விளம்பர பலகை கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி பாரதியார், வ.உ.சிதம்பர பிள்ளை, வரதராஜூலு நாயுடு, கர்ம வீரர் காமராஜர், முத்துசாமி ஆசாரியார் ஆகியோர் படங்களோடு அவர்கள் பெயர்களும் இந்த விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் முத்துசாமி ஆசாரியாரின் பெயர் முத்துசாமி ஆசாரி என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் விசு. சிவக்குமார் கூறகையில், முத்துசாமி ஆசாரியார் ஒரு சுந்திர போராட்ட தியாகி. அவர் வரலாற்றையும், தியாகத்தையும் சிலர் திட்டமிட்டு மறைத்துவிட்டனர். ஆகவே, இன்றைய தலைமுறையினர் அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் முத்துசாமி ஆசாரியார் அவர்களை ஆசாரி என்று ஒருமையில் குறிப்பிட்டுள்ளது வேதனை அளிக்கின்றது. அதுவும் சுதந்திர போராட்ட தியாகியை இப்படி குறிப்பிட்டு அவமானப்படுத்தக் கூடாது. எனவே, அவரது பெயரை முறையாகக் குறிப்பிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையை உடனே அகற்றவில்லை எனில் இந்து முன்னணி மாநாடு நடக்கும் போது போராட்டம் நடத்த வேண்டி வரும் என்றார்.












Click it and Unblock the Notifications