தகவல் தொழில் நுட்பத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: கனிமொழி
கோவை: தகவல் தொழில் நுட்பத்துறையில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளவர்களாக இருக்கிறோம். எனவே, இத் துறையின் பயன்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் அமைய வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கேட்டுக் கொண்டார்.
கோவையில் ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக தமிழ் இணையதள மாநாடும் நடக்கிறது.
இணையதள மாநாட்டில் பங்கேற்கவும், அங்கு நடைபெறும் கண்காட்சியை பார்வையிடவும் வருபவர்களைக் கையாள்வது குறித்து எம்.பி. கனிமொழி தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் டேவிதாருடனும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதையுடனும் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஏற்கனவே எட்டு இணையதள மாநாடுகள் நடந்துள்ளது. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது இணையதள மாநாடு நடைபெற உள்ளது.
இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இத் துறையின் பயன்கள் அனைவரையும் சென்றடைய மாணவர்கள் உதவ வேண்டும்.
மாநாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாமல் கூட இருக்கலாம். எனவே, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும்.
இம் மாநாட்டின் மூலம் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்கள் பாமர மக்களை சென்றடையும் வண்ணம் நம் செயல்கள் இருக்க வேண்டும் என்றார்.