புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி 2 ரெளடிகள் கொலை
புதுச்சேரி: புதுச்சேரி பாரில் வெடிகுண்டுகளை வீசி இரு ரெளடிகள் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த ரெளடிகளின் உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த ரெளடி கழுவா செந்தில் (30). இவன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த இவன் சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தான்.
நேற்றிரவு தனது கூட்டாளிகள் 5 பேருடன் கோவிந்தசாலையில் ஒரு ஹோட்டலின் பாரில் மது குடித்து கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் கழுவா செந்தில் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் மூளை சிதறி கழுவா செந்தில் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனது கூட்டாளியான பாலாஜி (27) படுகாயமடைந்தான்.
தப்பி ஓட முயன்ற அவனை கொலை கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிவிட்டது.
இதையடுத்து கழுவா செந்திலின் உறவினர்கள் திரண்டு வந்து ஹோட்டலை அடித்து நொறுக்கினர். மேலும், ஹோட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தது அந்த கும்பல்.
இதையடுத்து அந்தப் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கோவிந்தசாலை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலைகள் குறித்து புதுவை பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.