நிதீஷ் குமார்-பாஜக மோதல் மேலும் வருகிறது
குஜராத் அரசு வெளியிட்ட விளம்பரத்தில் நிதீஷ்குமாரின் படத்தை பயன்படுத்தியதால் கடுப்பான நிதீஷ் குமார், அதை கடுமையாக கண்டித்தார். இதனால் நிதீஷுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் தற்போது வலுவடைந்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் கோஷி ஆற்று வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பேரிழப்பை சமாளிக்க குஜராத் மாநில அரசு ரூ. 5 கோடி நிதியை அளித்திருந்தது. அந்த நிதியை நேற்று திருப்பி அனுப்பியது பீகார் அரசு.
இந்த நிலையில் மூத்த பாஜக தலைவரும், பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, நிதீஷ்குமாருடன் செல்லும் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாட்னா மாவட்டம் பலிகஞ்ச் பகுதியில் நடத்தவுள்ள பேரணியில் நான் நிதீஷ் குமாருடன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் குஜராத் அரசு கொடுத்த நிவாரண நிதியை முதல்வர் நிதீஷ் குமார் திருப்பி அளித்துள்ள நிலையில், நிதீஷ்குமாருடன் செல்ல எனக்கு விருப்பமில்லை.
குஜராத் அரசு அளித்த நிதியை நிதீஷ் குமார் திருப்பி அளித்துள்ளது சாதாரண செயல் இல்லை. கோசியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக கொடுக்கப்பட்ட நிதியில் அரசியலை கலப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றார்.