செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது
சென்னை: சூட்கேஸில் செங்கலை மறைத்து வைத்திருந்த இலங்கைத் தமிழரை விமான நிலையப் போலீஸார் பிடித்தனர். பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார். ஆனால் இரவோடு இரவாக அவரை தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர் போலீஸார்.
கொழும்புவில் வசித்து வருபவர் 42 வயதாகும் அப்துல் ஹமீத். இவரும், முகம்மது பஷீர் என்பவரும் இந்தியா வந்திருந்தனர். தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அவர்களது உடமைகளை பரிசோதித்தபோது ஹமீத் வைத்திருந்த சூட்கேஸில் ஒரு செங்கல் இருந்தது. இதைப் பார்த்து பாதுகாப்புப் படையினர் திடுக்கிட்டனர். அப்போது திடீரென ஹமீது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து ஹமீதை தேடினர். நேற்று இரவு ஒரு வீட்டில் மறைந்திருந்த ஹமீதை அவர்கள் பிடித்துக் கைது செய்தனர்.
செங்கல்லை கொண்டு வந்தது ஏன் என்பது குறித்து அவர்கள் விசாரித்தபோது, கொழும்பில், காலி அட்டைப் பெட்டிகளுக்கு டிமாண்ட் உள்ளது. எனவே அவற்றை நாங்கள் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தோம். காலி பெட்டிகளாக கொண்டு போனால் சந்தேகப்படுவார்கள் என்பதால் கூடுதல் எடையைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதில் வைப்பதற்கு செங்கல்லை எடுத்துச் சென்றோம் என்று தெரிவித்தார்.