பன்றிக்காய்ச்சல்-தமிழக எல்லையில் தீவிர மருத்துவ பரிசோதனை
புளியரை: கேரளாவில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லைகளில் தீவிர மருத்துவ பரிசோதனை தொடங்கியது.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம், வயநாடு, கொல்லம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சல் தாக்கி அம்மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
கேரளாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவி விடக் கூடாது என்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து கடந்த செவ்வாய் கிழமையன்று சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து கேரள-தமிழக எல்லை பகுதி மாவட்டங்களில் பன்றி காய்ச்சலை பரவாவண்ணம் தடுக்கும் விதமாக மருத்துவ முகாம்களை அமைக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லை புளியரை, குமரி மாவட்டம் களியாக்கவிளை பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களில் வரும் பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.