தீண்டாமை சட்டத்தில் மாற்றம் தேவை-தேவரின் தம்பி பேரன் கோரிக்கை

குற்றாலத்தில் உள்ள கேரள அரண்மனையில் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயற்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் உறவினரும் அமைப்பின் தலைவருமான என்.வெள்ளைசாமி தேவர் கலந்து கொண்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் 2011 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எங்கள் சமுதாய மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் எங்கள் சமுதாய மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். இல்லை தமிழகமெங்கும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்.
வெற்றி, தோல்வி சகஜம். எங்கள் பலம் அப்போது தெரியும். இரண்டரை கோடி மக்கள் கொண்ட சமுதாயம் அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறது.
தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை 6468 பேர் தேவர் சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இக்கொடுமை அதிகம் உள்ளது. ஆனால் அங்கு அவ்வளவு வழக்குகள் இல்லை. இச்சட்டம் மூலம் அமைச்சர் சுரேஷ்ராஜன், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவர் சமூகம் என்றால் தவறான பார்வை இருக்கிறது. இதனை மாற்றும் விதமான பணிகள் தொடங்கியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications