இந்தியாவில் 100 இடங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் திட்டமிட்டது-ஹெட்லி
டெல்லி: இந்தியாவில் 100 இடங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டிருந்தது என்று இந்திய விசாரணையாளர் குழுவிடம் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெட்லியை சமீபத்தில் நான்கு பேர் கொண்ட இந்திய விசாரணையாளர் குழு விசாரித்தது. அப்போது இந்தியாவில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு போட்டிருந்த திட்டங்கள் குறித்து அவன் கூறியுள்ளான்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தி...
லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த ஏராளமான ஏஜென்டுகள் இந்தியாவின் 100 முக்கிய நகரங்களுக்குச் சென்று உளவு பார்த்தனர். முக்கிய பகுதிகளை அடையாளம் கண்டு, அவை குறித்து ஆய்வு மேற்கொண்டு புகைப்படங்களும் எடுத்தனர்.
அந்த ஏஜென்டுகள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. காரணம், லஷ்கர் இ தொய்பா அமைப்பு ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதை விரும்பாது. அவர்கள் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கும்.
இந்த நூறு நகரங்களில் 30 நகரங்களில் நான் உளவு பார்த்தேன். வீடியோ படம் எடுத்தேன். புகைப்படங்களும் எடுத்தேன். மும்பையும் இதில் அடக்கம். மும்பை நகர் குறித்துதாதன் நான் விரிவாக படம் எடுத்து பல்வேறு முக்கிய தகவல்களை சேகரித்தேன்.
2006-09ம் ஆண்டு காலத்தில் மொத்தம் 9 முறை நான் இந்தியாவுக்கு பயணம் செய்தேன். அத்தனையும் உளவு பார்த்து தகவல் சேகரிக்கவே என்று கூறியுள்ளான் ஹெட்லி.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தனது தொடர்புகளை அமெரிக்காவின் எப்.பி.ஐயிடம் ஒப்புக் கொண்டு, கோர்ட்டிலும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான் ஹெட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
அவனை விசாரிக்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அமெரிக்க அரசும், எப்.பி.ஐயும் கடுமையாக இழுத்தடித்து கடந்த மாதம்தான் அனுமதி கொடுத்தன. இதையடுத்து அவனை தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு 7 நாட்கள் சிகாகோவில் வைத்து ஹெட்லியிடம் விசாரணை நடத்தியது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications