உத்தப்புரத்தில் மீண்டும் பதட்டம்-ஒரு சமூக பெண்கள் திடீர் உண்ணாவிரதம்
உத்தப்புரம் கிராமத்தில் பல வருடங்களாக இருந்து வந்த தீண்டாமைச் சுவரை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் இடித்துத் தள்ளினர். மேலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்வதற்காக புதிய பாதையையும் ஏற்படுத்தினர். இதற்கு இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.
இந்த சர்ச்சை காரணமாக அரசு ஏற்படுத்திக் கொடுத்த வழியில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவில் அருகே சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவியும், அவரது கணவரும் ஈடுபட்டிருந்தபோது, மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கடும் மோதலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் இன்று ஒரு சமூகத்துப் பெண்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஏற்படுத்திய வழியில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய அவர்கள் போலீஸார் நடத்திய தடியடிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை திண்டுக்கல் சிபிஎம் எம்.எல்.ஏ. பாலபாரதி சந்தித்து பேசினார்.
இந்த உண்ணாவிரதம் காரணமாக உத்தப்புரத்தில் பதட்டம் நிலவுகிறது.