விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?
சென்னை: விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால் க்யூ பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இதனால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 12-ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கங்கள் காரணமாக இருக்கலாம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
2,3 நாட்களுக்கு மேல் நடந்த விசாரணையில் இந்த வழக்கிற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்கள் குறித்து எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், அதில் தொடர்புள்ளவர்கள் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதால் தான் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருப்பதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications