தேர்தல் கமிஷனர் ஆவாரா சாந்தா ஷீலா நாயர்?
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லாவின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.
இதையடுத்து இப்போது தேர்தல் ஆணையராக உள்ள எஸ்.ஒய்.குரேஷி புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கவுள்ளார்.
இதனால் காலியாகும் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஒரு பெண் அதிகாரியை நியமிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா விரும்புவதாகத் தெரிகிறது.
வழக்கமாக இந்தப் பதவிக்கு மத்திய அரசுத்துறை செயலாளர்கள் தான் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில் மத்திய அரசுத் துறைகளி்ல் உள்ள பெண் செயலாளர்களில் சாந்தா ஷீலா நாயர், சுஷ்மா நாத் ஆகியோர் தான் மூத்தவர்கள்.
இதில் ஷீலா நாயர், 1973ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் தமிழகத்தில் பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராக இருந்துள்ளார்.
தற்போது மத்திய சுரங்கத்துறை செயலாளராக உள்ளார். இந்தப் பதவிலியிருந்து ஷீலா நாயர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.
தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 62 வயது வரை இருக்கலாம் என்பதால் அவர் சாந்தா ஷீலா நாயர் புதிய தேர்தல் கமிஷனரா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சாந்தா ஷீலா நாயருக்கு இந்தப் பதவி தரப்படாவிட்டால் சுஷ்மா நாத்துக்கு இந்தப் பதவி கிடைக்கலாம்.
இவர் 1974ம் ஆண்டு பேட்ச் மத்திய பிரதேச கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். இவர் இப்போது நிதித்துறையில் செலவீனங்கள் பிரிவின் செயலாளராக உள்ளார். நாட்டின் பட்ஜெட்டை உருவாக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் பதவி இது.
இதற்கிடையே நிதித்துறை செயலாளராக உள்ள அசோக் சாவ்லா, விவசாயத்துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோரும் தேர்தல் ஆணையர் பதவிக்கு குறி வைத்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதே என்று தெரிகிறது.
தேர்தல் ஆணையராக இதற்கு முன் வி.எஸ்.ரமா தேவி இருந்துள்ளார். 1990ம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவர் அடுத்த 2 வாரங்களில் மாநில ஆளுநராகப்பட்டுவிட்டார்.