தமிழகத்தில் 46 ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகள் மாற்றியமைக்கப்படும்: ரயில்வே
சென்னை: தமிழகத்தில் உள்ள 46 ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளை நடப்பாண்டில் மாற்றி அமைக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை கடக்கும் போது விபத்துக்குள்ளாகி ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 22-ம் தேதி உலக ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் குறித்த விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் நேரும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள 2,949 லெவல் கிராசிங்குகளில் 1,194 ல் ஆள் இல்லை. இதில் தமிழகத்தில் மட்டும் 1,070 ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகள் உள்ளன.
கடந்த 2007-08-ம் ஆண்டில் ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் நடந்த விபத்துகளில் தமிழகத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே எடுத்ததின் பயனாக, ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் ஏற்படும் உயிரிழப்பு குறைந்தது.
ஆனால், கடந்த 4-ம் தேதி வடக்குக் கோவையில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே துணை தலைமை பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ் கூறுகையில்,
இன்னும் 5 ஆண்டுகளில் நாடெங்கும் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகள் அனைத்தும் மூடப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். லெவல் கிராசிங்குகளில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாலங்களை ரயில்வே துறை அமைத்துக் கொண்டிருக்கிறது.
இதற்கான செலவை, ரயில்வே துறையும் அந்தந்த மாநில அரசும் தலா 50 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன. இதை அடுத்து கடந்த ஆண்டு (2009-10) 23 ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதே போன்று இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள 46 ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் மாற்றி அமைக்கப்படும்.
மதுரையில்தான் அதிகம்!
தமிழகத்திலேயே மதுரையில் தான் அதிகபட்சமாக 426 ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன. இதை அடுத்து திருச்சியில் 399-ம், சேலத்தில் 144-ம் உள்ளன.
ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை கவனமாக கடக்க வேண்டும். வாகன ஓட்டுநர்கள் அங்குள்ள எச்சரிக்கை பலகைகளை கவனிக்க வேண்டும். வாகனங்களில் எஃப்.எம். மற்றும் வீடியோ சாதனங்களை அதிக ஒலியளவில் வைத்துக் கொண்டு கடக்கக் கூடாது. இப் பகுதிகளைக் கடக்கும்போது அதிக ஒலி எழுப்புமாறு ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அவர்.












Click it and Unblock the Notifications