கிரேனிலிருந்து ராட்சத இரும்புக் கம்பம் விழுந்து விமான நிலைய தொழிலாளர் பலி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும் விரிவாக்கப் பணியின்போது கிரேன் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத இரும்புக் கம்பம் கீழே விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. விமான நிலையப் பகுதியின் நுழைவாயில் அருகே புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக ராட்சத தூண்களை அமைத்து அதன் மீது இரும்புக் கம்பங்களை வைத்து வருகின்றனர். ஒவ்வொரு கம்பமும் 30 டன் எடை கொண்டதாகவும். இவற்றை ராட்சத கிரேன் மூலம் தூக்கி வைத்து வருகின்றனர்.
நேற்று அந்தப் பணி நடந்தபோது, திடீரென கிரேனில் இருந்த கம்பங்களின் எடை அதிகமானதால், கிரேன் தடுமாறியது. அப்போது அந்த கிரேனின் ஆங்கிள் உடைந்து விழுந்தது. இதில் கோவையைச் சேர்ந்த செல்வமணி என்ற தொழிலாளர் சிக்கி படுகாயமடைந்தார். அவரை மிகுந்த சிரமத்துடன் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.