15 ஆண்டு கால இந்தியக் கனவு நனவானது-ஆசியா கோப்பையை வென்றது

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், இலங்கையும் தகுதி பெற்றன. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் கம்பீர் 15 ரன்களில் ரன் அவுட் ஆக தினேஷ் கார்த்திக் வசம் ரன் குவிக்கும் பொறுப்பு வந்தது. அவரும் நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். பொறுமையாகவும், நிதானமாகவும், அதேசமயம் சரியான ஷாட்களை அடித்தும் ஆடிய தினேஷ் 66 ரன்களைக் குவித்தார்.
அதேபோல ரோஹித் சர்மாவும் பொறுப்புடன் ஆடி 41 ரன்களை எடுத்தார். மற்றவர்களில் கேப்டன் டோணி 38 ரன்கள், கோலி 28, ரெய்னா 29 ரன்களை எடுத்தனர். இறுதியில், 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்தது இந்தியா.
பின்னர் ஆட வந்த இலங்கையை இந்தியப் பந்து வீசசாளர்கள் தடுமாற வைத்தனர். இதனால் ரன் குவிக்க முடியாமல் திணறியது இலங்கை. அந்த அணியில் அதிகபட்சமாக கபுகதேரா 55 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் ஆசிஷ் நெஹ்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களையும், ஜாகிர்கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜாவின் பங்கு 2 விக்கெட்.
இறுதியில் 81 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஆசியா கோப்பையை இந்தியா வெல்வது 5வது முறையாகும். 1984, 1988, 1990-01, 1995-ம் ஆண்டுகளிலும் இந்தியா கோப்பையை வென்றிருந்தது.ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. கடைசியாக 1995ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது.
டோணி தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications