போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. குழு-ஏற்குமாறு இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா. குழுவை இலங்க அரசு ஏற்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். இதற்கு இலங்கை கடும் அதிருப்தியும், எரிச்சலும் வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவினரை இலங்கைக்குள் நுழைய விட மாட்டோம் எனவும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், இந்த வாய்ப்பை இலஙகை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனதுதரப்பு நியாயத்தை நிரூபிக்க இதை அது பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள ஸ்டீவன் ரட்னர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர்.