பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய சீத்தாராம் யெச்சூரி கோரிக்கை
மதுரை: மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவே, பெட்ரோரால் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.
எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து மதுரையில் தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு யெச்சூரி பேசுகையில்,
மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை குறைப்பதன் மூலம் விலை உயர்வை தடுக்கலாம். எனவே, உடனே பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.
சமீபத்தில் மத்திய அரசு 3 ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளது. இந்த லாபத்தை மக்களின் சமூக நலனுக்காக செலவிடலாம்.
அதே போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்திய பணக்காரர்களுக்கு வரி விதிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் வறுமைக்கோட்டில் வாழும் ஏழை - எளிய மக்களை விடுவிக்கலாம்.
அதைவிடுத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் தலையில் மத்திய அரசு சுமையை ஏற்றியுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பணக்காரர்கள் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை மக்கள் மேலும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த மூன்று மாதத்தில் பெட்ரோல் - டீசல் விலையில் எந்த உயர்வும் ஏற்படவில்லை. ஆனால் மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற போராட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.