கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சென்னை விமானம்
கொச்சி: சென்னைக்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், இயந்திர கோளாறு காரணமாக, அவசரமாக மீண்டும் கொச்சியிலேயே தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் 42 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்துக்கு அவசர தகவல் தந்தார்.
இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க கொச்சி விமான நிலையம் தயாரானது. தீயணைப்பு வாகனங்களும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
ஆனால், எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. புறப்பட்ட 30வது நிமிடத்தில் மீண்டும் அதே விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இறக்கப்பட்டு அவர்களில் 12 பேர் தனியார் விமானத்தில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை செல்லும் பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.