தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கே வேலை-விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் வரவேற்கப்படக் கூடியதுதான். ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படாது. ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
தற்பொழுது அரசாங்கத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லை. ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்.
ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? அரசுத் தொழிற்சாலைகளின் பங்கு தனியாருக்கு விற்கப்படுகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று தனியார் துறை வளர்க்கப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம், தற்பொழுது கொண்டு வரப்படவுள்ள சட்டம் தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்மொழி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. ஆரம்பம் முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று வற்புறுத்தி வந்தவர் முதல்வர் கருணாநிதி.
தமிழ் ஈழம்-ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?:
தமிழின வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இனப்படுகொலை இலங்கையில் நடந்த பிறகு இந்த கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இன்று இனப் படுகொலைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கென ஒரு தாயகத்தை ஏற்கனவே பெற்றுள்ளனர். அதை தக்க வைக்கும் வகையில் எதிர்காலத்தில் தமிழினப் பாதுகாப்பிற்கு அவர்கள் கோரும் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர வேண்டும் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?
பழ.கருப்பையா வீடு புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டையும், காரையும் சேதப்படுத்தி கொலை வெறி மிரட்டல் விடுத்துள்ளனர். இது என்ன நியாயம்? பழ. கருப்பையாவின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.