இந்தியா-கனடா அணுசக்தி உடன்பாடு
டொரன்டோ: இந்தியா-கனடா இடையே அணுசக்தி உடன்பாடு கையெழுத்தானது.
கனடா தலைநகர் டொராண்டோவில் ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பேசியதையடுத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மன்மோகன் சிங், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் முன்னிலையில் இந்தியாவின் சார்பில் அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி, கனடா சார்பில் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் கேனன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இந்தியா உலகின் பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் உலக அளவில் இந்தியாவின் பங்களிப்புதான் பிரதானமாக இருக்கப் போகிறது என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், அணு சக்தித் துறையில் இந்தியா-கனடா இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் புதிய அத்தியாயம் படைக்கப் போகிறது.
இந்தியாவில் அணு உலைகள் மிகப் பத்திரமாக உள்ளன. கனடாவிலிருந்து இறக்குமதியாகும் அணுசக்தி மூலப்பொருள்கள் திட்டமிடாத வேறு நோக்கங்களுக்கு முறைகேடாக அனுப்பி வைக்கப்பட்டுவிடுமோ என்கிற ஐயம் துளியும் யாருக்கும் வேண்டாம்.
இந்தியாவுக்கு வழங்கப்படும் அணுசக்தி பொருள்கள், தொழில்நுட்பம் அனைத்தும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி மிகுந்த பாதுகாப்பில் இருக்கும் என்றார்.
கடந்த 1974-ம் ஆண்டில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, இந்தியாவுக்கு அணு ஆயுத பொருட்களை வழங்கக்கூடாது என்று, கனடா உள்ளிட்ட அணு ஆயுதங்களை சப்ளை செய்யும் 46 நாடுகளைக் கொண்ட குழு தடை விதித்து இருந்தது. 34 ஆண்டுகளுக்குப்பின் கடந்த 2008ம் ஆண்டில் இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு உள்ளிட்ட 7 நாடுகளுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. 36 ஆண்டுகளுக்குப்பின் 8வது நாடாக கனடாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கனடாவிலிருந்து அணு உலைக்கான சாதனங்கள், தொழில்நுட்பம், யுரேனியம் போன்ற எரிபொருள்கள் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.
மேலும் இந்தியாவின் அணு சக்தி உற்பத்தி சந்தை கனடாவுக்கு திறந்து விடப்படுகிறது.
இந்தியாவுடன் இந்த உடன்பாடு செய்து கொண்டுள்ள 8வது நாடு கனடா. ஏற்கெனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்துள்ளன.
இந்தியா புறப்பட்டார் மன்மோகன் சிங்:
இந் நிலையில் 3 நாள் பயணமாக கனடா சென்ற பிரதமர் நேற்று இந்தியா புறப்பட்டார். வழியில், நேற்றிரவு, ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் தங்கினார். இன்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.