உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவினர் அரிவாள்கள், இரும்புக் கம்பிகள், சோடா பாட்டில்களால் தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது குறித்து கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் பேச ஆரம்பித்த உடனேயே, எரியோடு பேரூராட்சி திமுக செயலாளர் ஜீவா தலைமையில் 20 திமுகவினர் அரிவாள், இரும்புக் கம்பி, சோடா பாட்டில் ஆகியவற்றுடன் பொதுக்கூட்ட மேடையில் ஏறி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஆண்டிவேல், வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்ரமணியன், எரியோடு பேரூராட்சி அதிமுக செயலாளர் அறிவாளி வெற்றிவேல், மற்றும் தொண்டர்கள் பாண்டியன், நந்தகோபால், முருகபாண்டியன், சின்னப்பன் ஆகியோர் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற இந்தத் தெரு முனைக் கூட்டத்திற்கு காவல் துறையினர் எந்தவிதமான பாதுகாப்பும் தரவில்லை. திமுகனரின் இந்த கொலை வெறித் தாக்குதல் குறித்து இருநூறு மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் கழக நிர்வாகிகள் புகார் கொடுக்கச் சென்றபோது, ஒரு காவலாளி கூட அங்கு இல்லை.
ஆட்சியில் நடைபெறும் அவலங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியினை செய்யும் கழக உடன்பிறப்புகளுக்கு துணையாக என்றும் நான் இருப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொலை வெறித் தாக்குதல் நடத்திய எரியோடு பேரூராட்சி திமுக செயலாளர் ஜீவா உட்பட, இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.