சிறு தீப்பெட்டி ஆலைகளுக்கு கலால் வரி விலக்கு அளிக்க சிபிஎம் கோரிக்கை
சிவகாசி: சிறு தீப்பெட்டி ஆலைகளுக்கு கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில்,
தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் இக்கட்டான நெருக்கடி நிலையில் சிக்கி தவித்து வருகின்றன. நலிவுற்ற நிலையில் உள்ள அவர்களை மீட்க மத்திய கலால் வரி விலக்கு அளித்து உதவ வேண்டும்.
தீப்பெட்டி தொழில், தமிழகத்தில் குடிசைத் தொழிலாகவே இருந்து வருகின்றது.
எனவே, இந்த தொழில் சிறிய மதிப்பீட்டில் பெருமளவு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கிறது. மேலும், கிராமப்புற பொருளாதாரத்துடன் சார்ந்த மேம்பாட்டை கொண்டதாக இந்த தொழில் உள்ளது. கிராம மக்களுக்கு வருவாய் உத்தரவாதம் அளிக்கும் தொழிலாகும்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அளித்து வந்த சிறு சோடா கம்பெனிகள், ஊறுகாய் கம்பெனிகள், சிறு பிஸ்கெட் உற்பத்தி கம்பெனிகள் பெரும் வணிக சவாலை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து விட்டன.
பெரும் சவால்களுக்கு இடையே தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு தொழிலாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தீப்பெட்டி தொழில் மூலம் 3 லட்சம் பேர் (பிசினஸ் ஸ்டாண்டர்டு 8-6-2010) நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்த 1760 சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் 586 ஆக குறைந்துவிட்டது.
மாதம் ஒன்றுக்கு விம்கோ நிறுவனம் 36 கோடி தீப்பெட்டிகளை இயந்திரம் மூலம் உற்பத்தி செய்கிறது. அதே போன்று ஐ.டி.சி. நிறுவனம், இயந்திர உதவியோடு தயாரிக்கும் பொருட்களை , நாடு முழுவதும் தங்களது பொருட்களை விற்பனை செய்ய 10 லட்சம் மையங்களை கொண்டுள்ளது.
ஆண்டு தோறும் விம்கோ நிறுவனம் 2400 கோடி தீப்பெட்டியை விற்பனை செய்கிறது. இந்த இரு பெரும் நிறுவனத்தின் சவால்களுக்கு இடையே சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொழிலை நடத்துவதற்கு மிக பரிதாபகரமான சூழ்நிலையில் உள்ளன.
தற்போது சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு குறைந்த சம்பளத்திற்கு பணியாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.
விம்கோவும், ஐ.டி.சி. நிறுவனமும் கலால் வரி மூலம் தேசிய கருவூலத்திற்கு வருவாய் வழங்குகின்றன என்ற புள்ளி விபரம் பெற முடியவில்லை.
இத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னையில் உள்ள சிறுதொழில் துறையின் கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடித நகலை இணைத்துள்ளேன்.
இதில் பகுதி எந்திரமயமான தீப்பெட்டித் தொழிலின் பிரச்சனைகள் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் உள்ளன. எனவே, பகுதி எந்திரமய தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய கலால் வரி விலக்கு அளிக்க சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.