அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் வெள்ளை எருக்கச்செடி

பண்டை காலங்களாக எருக்கஞ் செடி என்றாலே பொதுமக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வந்தது. இச்செடிகள் அதிகமாக புன்செய் நிலத்தில் மட்டுமே காணப்படும். இதனால் வீடுகளில் வளர்த்தாலே அது அபசகுணம் என்று கூறுவர். இச்செடிகள் பாழடைந்த வீடுகளில்தான் வளர்ந்து நிற்கும். இதனால் நன்றாக வாழ்ந்து வரும் வீடுகளில் முளைத்தால் கூட அது குடும்பத்திற்கு ஆகாது என்பர். ஆனால் இப்படி வெறுத்து ஒதுக்கப்பட்ட எருக்கச் செடிக்கு தற்போது பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
எருக்கஞ் செடியில் 2 வகைகள் உள்ளன. இதில் ஒரு வகை செடி நீல நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். இதில் வெள்ளை பூ செடிக்குதான் அதிக கிராக்கி உள்ளது. அதாவது அந்த செடியை சில வீடுகளில் தெய்வத்திற்கு இணையாக மதிக்கின்றனர். சில வீடுகளில் துளசி செடியை நடுவில் வைப்பது போன்று இந்த வெள்ளை எருக்கஞ் செடியை வீட்டின் முன்பு வளர்க்கின்றனர்.
இப்பகுதியில் இந்த செடியை பண்ணைகள் அமைத்து அதன் மூலம் கிராமங்களில் விற்பனை செய்கின்றனர். ஒரு செடி 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இதில் பெரிய செடிகளின் தண்டு பகுதியை சிறிய பிள்ளையார் சிலை செய்வதற்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் அதிகமானோர் இந்த செடி வீட்டில இருந்தாலே பிள்ளையார் வீட்டில் இருப்பது போன்று நினைக்கின்றனர்.
அத்துடன் இந்த செடி வீட்டில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும். மேலும், தீய சக்திகள் வீட்டை அணுகாது என்ற ஐதீகத்தையும் கொண்டுள்ளனர். இதனால் கடையம் அருகேயுள்ள மாதாபுரம், கனாவூர், புலவனூர், பாவூர்சத்திரம், கீழப்பாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த செடியை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications