சட்டசபை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?
காலமான சுதர்சனம் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அணியைச் சேர்ந்தவராவார். சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வாசனின் ஆலோசனைப்படி திமுகவுடன் நல்லுறவைப் பேணினார்.
முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். மத்திய அரசுடன் மோதல் உருவான இலங்கைத் தமிழர் பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் சட்டசபையில் திமுகவுக்கு காங்கிரசால் நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் சுதர்சனம்.
அவரது மறைவையடுத்து சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராகப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களே என்பதால் அவரது ஆதரவு பெற்ற ஒருவரே இந்தப் பதவியில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
சுதர்சனத்தைப் போலவே திமுகவுக்கு பிரச்சனை தராத ஒருவரை தேர்ந்தெடுக்க வாசன் விரும்புவதாகத் தெரிகிறது. அந்த வகையில் ஆளும் தரப்போடு நல்லுறவில் உள்ள சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவர்களான யசோதா, ஞானசேகரன் அல்லது முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமான காங்கிரஸ் சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.
பீட்டர் அல்போன்சுக்கு முதல்வரின் ஆசி இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு அதிகம். இதனால் அவரை சட்டசபை காங்கிரஸ் தலைவராக்க முயன்றால் கட்சியில் பூசல் வெடிக்கலாம்.
இதைத் தவிர்க்க அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் பெற்று யசோதா அல்லது ஞானசேகரனை தேர்வு செய்ய வாசன் முயற்சி்க்கலாம் என்று தெரிகிறது.
அதிலும் அமைதியான சுபாவம் கொண்ட ஞானசேகரனுக்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கும்பகோணத்தில் மூப்பனார் சிலை திறப்பு:
இந் நிலையில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிலையை ஜூலை 3ம் தேதி கும்பகோணத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார்.
இதில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.