டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் செல்போன் அபேஸ்-கண்டுபிடிப்பு
டெல்லி: லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தியின் செல்போன், டெல்லி விமான நிலையத்தில் திருடப்பட்டது. இதையடுத்து 2 நாள் வேட்டைக்குப் பின்னர் போலீஸார் போனைக் கண்டுபிடித்து ராகுலிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி லண்டனில் இருந்து டெல்லி வந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர், தனது செல்போன் காணாமல் போயிருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.
இதுகுறித்து கறுப்பு பூனை பாதுகாப்பு படை அதிகாரியிடம் ராகுல் தெரிவித்தார்.
அந்த அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் பிரிவில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் செல்போனை திருடியவரை கண்டு பிடித்தனர்.
கண்காணிப்பு பிரிவில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தான் ராகுலின் செல்போனை திருடியுள்ளார். இதை அவரே விசாரணையில் ஒப்புக்கொண்டார். போலீசார் அந்த செல்போனை மீட்டு ராகுலிடம் ஒப்படைத்தனர்.