வெளிநாடுகளில் வேலை-பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 4 பேர் கைது
சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பெண்களை விபச்சாரத்திற்கு விற்ற புரோக்கர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று சென்னை விபசார தடுப்பு போலீசில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் புகார். அதில்,
ஏற்கனவே நான் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடனம் ஆடி இருக்கிறேன். இதே போன்று சிங்கப்பூருக்கு நடனம் ஆட அழைத்துச் செல்வதாக சில புரோக்கர்கள் கூறினார்கள். மாதம் ரூ. 40,000 வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள்.
இதை நம்பி அவர்களை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சந்திக்க சென்றேன். அப்போது அங்கிருந்த ஒருவர் என்னை பலவந்தமாக அவர் இச்சைக்கு விருந்தாக்க முயன்றார்.
நான் மறுக்கவே என்னை தகாத வார்த்தைகளால் பேசி அங்குள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்து நான் இந்த புகாரை கொடுக்கிறேன்.
என்னைப் போன்ற இளம்பெண்கள் பலரை இந்த கும்பல் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடனம் ஆடும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர்.
இவர்களிடம் ஏமாறும் பெண்களை சிங்கப்பூர், மலேசியாவிற்கு அழைத்துச் சென்று விபசாரத்திற்கு விற்றுள்ளனர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். போலீஸார் நடத்திய வேட்டையில், அன்பு (35), தர்மராஜ் (28), முருகன் (35), புச்சிபாபு (26) ஆகிய 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 4 செல்போன்களும், 4 பாஸ்போர்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
4 பாஸ்போர்டுகளும் 4 இளம்பெண்கள் பெயரில் இருந்தது. இதைப் போன்ற ஏராளமான மோசடி கும்பல் சென்னையில் இருப்பதாகவும், அவர்களை உடனடியாக பிடிக்கும்படியும் கமிஷ்னர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.