பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு: தவறிழைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை- அரசு
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டை தவறாக செய்த ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில்,
பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் புதிய மதிப்பெண் சான்றிதழ்களை சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 9 இடங்களில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம். புதிய மதிப்பெண் சான்றிதழை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை ஒவ்வொரு மாணவருக்கும் தபால் மூலம் தெரிவித்துள்ளோம்.
மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 2 ஆயிரத்து 20 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு மதிப்பெண் கூடியிருக்கிறது? எத்தனை பேருக்கு மதிப்பெண் குறைந்திருக்கிறது என்ற பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
இதன் பிறகு அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். சிறிய தவறாக இருந்தால் நடவடிக்கை எதுவும் கிடையாது. ஆனால், பெரிய அளவில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி 70 பி யின்படி, தவறுக்கு ஏற்ப ஒழுங்கு நடவடிக்கை, வருடாந்திர ஊதிய உயர்வு ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications